
’’சென்னை ஐஐடி சார்பில் அடுத்த ஒரு மாத காலத்தில் ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு தொடர்பான சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் ’’ என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி சார்பில் ஆன்லைன் வாயிலாக பயிலும் இளங்கலை மின்னணு அமைப்பு (BS in Electronic Science ) பட்டப்படிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொளி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, ‘’ அனைத்து துறையும் மின்னணுமயமாகி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் தெரியவில்லை என்றால் நம்மால் இனி வரும் காலத்தில் ஒரு சர்வீஸ் சென்டர் கூட நடத்த முடியாது. இளங்கலை தரவு அறிவியல் (BS Data Science) படிப்பை ஐஐடியில் ஆன்லைன் வாயிலாக 17 ஆயிரம் மாணவர்கள் பல கட்டங்களாக பயின்று வருகின்றனர். அதிலும் 400 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அவர்களை வேலைக்கு எடுக்க தயாராக உள்ளனர்.
மேலும், தொடங்கப்பட்டுள்ள இந்த இளங்கலை படிப்பின் மூலம் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அடிப்படையை முதலாம் ஆண்டு முடிக்கும் போது கற்றுக்கொள்ள முடியும். மூன்றாம் ஆண்டில் டிப்ளமோ சான்றதிலும், நான்கு ஆண்டுகளை முழுமையாக முடிப்பவர்களுக்கு இளங்கலை பட்டமும் அளிக்கப்படும்.
சென்னை ஐஐடி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து 9-12 வகுப்புகளை சேர்ந்த 250 அரசு பள்ளிகளில் பள்ளிக்கு தலா 400 மாணவர்கள் என அடுத்த ஒரு மாத காலத்தில் எலக்ட்ரானிக் சிஸ்டம் தொடர்பான கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம். 520 அரசு பள்ளி ஆசிரியர்களை இதற்காக தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்துள்ளோம்.
'அனைவருக்கும் ஐஐடி' என்ற வகையில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்களை இலவசமாக இந்த படிப்பில் இணைக்கவும், ஆண்டிற்கு ரூ.5 லட்சம் என குறைவான வருமானம் உள்ள பெண் குழந்தைகளுக்கும் / பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கும் வகையில் ஐஐடி இந்த இளங்கலை படிப்பை தொடங்கியுள்ளது’’ என்றார்.