ஆம்புலன்சுக்கு பணம் இல்லை: பைக்கில் கொண்டு சென்ற தாயின் சடலம்: கண்கலங்க வைத்த ஏழை மகனின் செயல்

ஆம்புலன்சுக்கு பணம் இல்லை: பைக்கில் கொண்டு சென்ற தாயின் சடலம்: கண்கலங்க வைத்த ஏழை மகனின் செயல்

உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல பணம் இல்லாததால் பைக்கில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார் மகன். அவரின் இந்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் உள்ள கோடாறு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் மந்தர் யாதவ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெய் மந்தரை அவரது மகன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய் மந்தர் நேற்று உயிரிழந்தார். செவிலியர்களின் அலட்சியத்தால் தாயார் உயிரிழந்ததாக அவரது மகன் சுந்தர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, தாயாரின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தனியார் ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார் சுந்தர். அப்போது, அவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம். அவரிடம் பணம் இல்லாததால் நூறு ரூபாய்க்கு மரக் கட்டைகளை வாங்கிய சுந்தர், அதில், தனது தாயாரின் உடலை கட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். 80 கிலோ மீட்டர் தூரம் வரை தனது தாயாரின் உடலுடன் மகன் பைக்கில் சென்றது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கிடையாது என்றும் பதிவு செய்த பின்னரே நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாத அவல நிலை மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது அனைவரையும் வேதனையடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in