மாமனாரைக் கோடாரியால் வெட்டிக்கொலை செய்த மருமகன்: வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்

கொலை செய்யப்பட்ட கிறிஸ்துதாஸ். கைது செய்யப்பட்ட பாக்யராஜ்.
கொலை செய்யப்பட்ட கிறிஸ்துதாஸ். கைது செய்யப்பட்ட பாக்யராஜ்.மாமனாரைக் கோடாரியால் வெட்டிக்கொலை செய்த மருமகன்: வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்

கியாஸ் சிலிண்டருக்கு பணம் கேட்ட மாமனாரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து விட்டு வலிப்பு வந்து இறந்தததாக நாடகமாடிய மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணலிக்கரை ஆண்டாம்பாறையைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ்(61). இவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மூன்று மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால், மூன்றாவது மகள் ஜான்சி வீட்டில் கிறிஸ்துதாஸ் வசித்து வந்தார். இந்நிலையில், கிறிஸ்துதாஸ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால், கிறிஸ்துதாஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கிறிஸ்துதாஸ்க்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அதனால் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் அவரது மகள் ஜான்சியும், மருமகன் பாக்யராஜூம் தெரிவித்தனர். ஆனால், பிரேத பரிசோதனையில் கிறிஸ்துதாஸ் தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் பாக்யராஜ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்த போது அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," கேரளாவில் பணிபுரிந்து வந்த பாக்யராஜ் தனது மாமனார் கிறிஸ்துதாஸ்சுடன் நேற்று மது அருந்தியுள்ளார். அப்போது பாக்யராஜூடம் கியாஸ் சிலிண்டர் வாங்க ஆயிரம் ரூபாய் கிறிஸ்துதாஸ் கேட்டுள்ளார். ஆனால், பணமில்லை என்று பாக்யராஜ் கூறியுள்ளார். ஆனால்,கிறிஸ்துதாஸ் மீண்டும் பணம் கேட்டதால், கோடாரியால் அவர் தலையில் பாக்யராஜ் வெட்டியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். கிறிஸ்துதாஸை தாக்கிய கோடாரியை கிணற்றில் பாக்யராஜ் வீசியுள்ளார். தனது மனைவியுடன் சேர்ந்து மாமனார் மயங்கி விட்டதாக கூறி நாடகமாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், கிறிஸ்துதாஸ் அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பாக்யராஜ் கைது செய்யப்பட்டதுடன், கிணற்றில் இருந்து தீயணைப்புத்துறை உதவியுடன் கோடாரி மீட்கப்பட்டுள்ளது" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in