தாயை தரதரவென இழுத்துச் சென்ற மகன்; வீட்டில் கொன்று புதைத்த கொடூரம்: குடிக்க பணம் தராததால் விபரீதம்

கைதான மகன் சக்திவேல். கொலை செய்யப்பட்ட தாய் அசோதை
கைதான மகன் சக்திவேல். கொலை செய்யப்பட்ட தாய் அசோதை

விழுப்புரம் அருகே குடிக்க பணம் தர மறுத்ததால் தாயை அடித்து கொன்று புதைத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையானதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதா (67). மூதாட்டியான இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். சக்திவேலுக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 4 மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் குடிப்போதைக்கு அடிமையான சக்திவேல், 24 மணி நேரமும் குடித்துவிட்டு, சித்தாமூர் கிராமத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதையே வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

மேலும், குடிப்போதையில் தனது மனைவி, மகள்களை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர்கள் அனைவருமே சக்திவேலை விட்டு பிரிந்து வெளியூர் சென்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சித்தாமூர் கிராமத்தில் தனது மகன் சக்திவேலுடன் அவரது தாய் அசோதா வாழந்து வந்துள்ளார். குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தனது மகன் சக்திவேல் தகராறு செய்ததால் தனது வீட்டில் தங்காமல் இரவு நேரங்களில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் வீட்டு திண்ணையில் படுத்து தூங்குவதை அசோதா வழக்கமாக கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். போதை அடிமையால் சித்தாமூர் கிராமத்தில் வசிப்பவர்களிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், குடிக்க பணம் இல்லை என்றால் ஆடு, மாடு, வீட்டில் உள்ள பாத்திரங்களை எல்லாம் திருடி சென்று விற்று குடிப்பதையே சக்திவேல் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்த தனது தாய் அசோதாவை எழுப்பி குடிக்க பணம் தருமாறு கேட்டு சக்திவேல் தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால் தனது தாய் அசோதாவை தரதரவென தனது வீட்டிற்கு இழுத்து சென்று பணம் இல்லையென்றாலும் நகையை தருமாறு கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது சுவற்றில் தலையை மோதியதில் படுகாயம் அடைந்த அசோதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல், உயிரிழந்த நிலையில் கிடந்த தனது தாயின் உடலை பிடித்து இழுத்து சென்று தனது வீட்டு தோட்டத்தில் குழித்தோண்டி புதைத்து விட்டு தனது வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் அசோதாவின் வீட்டு கதவு திறக்காமல் இருப்பதைக் கண்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டு கதவை தட்டி பார்த்துள்ளனர். வீட்டு கதவு திறக்கப்படாததால் கிராம மக்களே வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் குடிப்போதையில் சுயநினைவின்றி கிடந்த சக்திவேலை எழுப்பி விசாரித்த போது தனது தாயை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியதை கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து தாயை கொலை செய்த மகன் சக்திவேலை பிடித்து வைத்து கொண்ட கிராம மக்கள் கண்டாச்சிபுரம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் ஆதிசக்தி சிவகுமரி மன்னன் முன்னிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் இருந்த அசோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in