`காலையில்தான் அப்பாவை பார்த்துவிட்டு வந்தேன்'- தந்தையை கொன்ற தம்பியை சிறையில் தள்ளிய அண்ணன்

கொலை
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் குடிபோதையில் தந்தையை கம்பால் அடித்துக் கொலை செய்த மகனை போலீஸார் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வில்லவிளையைச் சேர்ந்தவர் பூதலிங்கம்(85) இவர் வயோதிகத்தின் காரணமாக வேலைக்குச் செல்லவில்லை. இதனிடையில் சமீபத்தில் இவரது காலிலும் காயம் ஏற்பட்டது. இதனால் தனது இரண்டாவது மகன் சுப்பையா வீட்டில் படுக்கையிலேயே இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு பூதலிங்கம் இறந்துவிட்டதாக சுப்பையா தன் சகோதரர் வேலாயுதத்திடம் போனில் தெரிவித்துள்ளார்.

ஆனால் வேலாயுதம் காலையில் தனது தந்தையைப் பார்த்ததாகவும், அவர் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் கூறியதோடு, தன் தந்தை சாவில் மர்மம் இருப்பதாகவும், தன் சகோதரர் சுப்பையா மீது சந்தேகம் இருப்பதாகவும் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் மீனா இதுதொடர்பாக வழக்கு பதிந்து பூதலிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதில் பூதலிங்கம் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சுப்பையாவை இன்று கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுப்பையா, குடிபோதையில் தன் அப்பாவை கம்பால் அடித்ததாகவும், அடித்தபோது ஏற்பட்ட காயத்தால் அவர் உயிர் இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். குடிபோதையில் மகன், பெற்ற தந்தையை கம்பாலேயே அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in