
சகோதரியை தவறாக பேசியதால் தந்தையை கிரிக்கெட் பேட்டால் மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் சண்முக ராஜா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(55). இவருக்கு சுப்புலட்சுமி(48) என்ற மனைவியும், சுமித்ரா(28) என்ற மகளும், ஜபரீஷ் (23) என்ற மகனும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டுவந்ததால், கடந்த ஒரு வருடமாக குடும்பத்தை பிரிந்து வீட்டின் கீழ் நடைபாதையில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று சுமித்ராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது தம்பி ஜபரீஷ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு, பின்னர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி அவரது மகன் ஜபரீஷிடம், சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசி ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜபரீஷ் அவரது தந்தை பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றியதால் திடீரென கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கலால் தந்தை பாலசுப்பிரமணி தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் ஜபரீஷ் தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக கிண்டி காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் ஜபரீஷை கைது செய்தனர். பின்னர் பாலசுப்பிரமணி உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.