தாய்லாந்திலிருந்து சென்னை கொண்டு வரப்பட்ட தேவாங்கு குட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த விலங்குகள் மீண்டும் தாய்லாந்து அனுப்பப்பட உள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்கள் பிடிபடுகிறார்கள். அதுபோல் அரியவகை ஆமை, பாம்பு உள்ளிட்ட விலங்குகளைக் கடத்துபவர்களும் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவரின் பை லேசாக அசைவதைக் கண்ட அதிகாரிகள் அவரிடம் இருந்த பையைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் அரிய வகை ஆப்ரிக்கா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த 5 தேவாங்கு குட்டிகள் இருந்தன.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வெளிநாட்டிலிருந்து விலங்குகள் கொண்டு வர அனுமதி பெற்ற ஆவணங்களும், விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த ஆவணங்களும் அவரிடத்தில் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவுத் துறைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரியவகை தேவாங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்திற்கே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.