சென்னையில் நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படாத அதே நாளில் தஞ்சையில் உள்ள ஒரு தியேட்டரில் 35 நரிக்குறவர்கள் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்து படம் பார்த்த செய்தி வெளியாகி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நடிகர் சிம்புவின் 'பத்துதல' படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்திற்கு அப்படம் பார்க்கச் சென்ற நரிக்குறவ மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றினர். இந்த செய்தி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாகி உள்ளது. இது தொடர்பாக தியேட்டர் ஊழியர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த நாளில் அதே தினத்தில் தஞ்சையில் உள்ள விஜயா திரையரங்கம், 35 நரிக்குறவ மக்களை முதல் வகுப்பு இருக்கையில் அமர வைத்து படம் பார்க்க வைத்துள்ளது. இந்த தகவல் இன்று மெல்ல வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஜோதி அறக்கட்டளையின் சார்பில் திரையரங்க நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த இந்த செயல் அனைவரிடமும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இது மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடாது என்பதை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்திருந்தது. சென்னை திரையரங்க உரிமையாளர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் தஞ்சை தியேட்டரின் இந்த செயல் அமைந்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.