கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியப் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருவாலிபர்கள் பட்டுச்சட்டை, பட்டு வேட்டி, கூலிங் கிளாஸ் சகிதம் மணப்பெண் தேவை என்னும் பதாகையுடன் நிற்கின்றனர். ஆனால், இதன் பின்னால் இருக்கும் விழிப்புணர்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஷ் மோன். இவர் எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி. இவரது நண்பர் சுனிஷ். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். இவர்கள் இருவரும் நாகர்கோவில் நகரின் முக்கியப் பகுதிகளிலும், வடசேரி பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்திலும் திருமண மாப்பிள்ளை போல் பட்டுச்சட்டை, வேட்டி உடன் கையில் மணப்பெண் தேவை என்னும் பதாகையுடன் நிற்கின்றனர்.
அதில், தங்களுக்கு வரதட்சணையாக கார், பணம், தங்கம் எதுவும் தேவை இல்லை. மேலும், திருமணத்திற்கு சாதி, மதம் தேவையில்லை எனவும் எழுதியிருக்கிறது. இந்தப் பதாகையை வைத்துக் கொண்டு இவர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் விநோதமான இந்த இளைஞர்களின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்தது.