தன்னிடம் படித்த மாணவியைத் திருமணம் செய்வதற்காக ஆசிரியை ஒருவர் அறுவை சிகிச்சை செய்து பாலினத்தை மாற்றியுள்ள சம்பவம் ராஜஸ்தானில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்தவர் மீரா குந்தல். இவர் நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படித்த மாணவி கல்பனா ஃபவுஜ்தாரை மீராகுந்தல் காதலித்துள்ளார். கபடி வீரரான கல்பனாவிற்கு உடற்கல்வி ஆசிரியையான மீரா தான் பயிற்சி அளித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது, மீராவின் காதலை கல்பனா ஏற்றுக் கொண்டதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஒரே பாலினத்தால் இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் தனது பாலினத்தை மாற்ற மீரா முடிவு செய்தார்.
இதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக மீரா பதிவு செய்தார். 2019-ம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதன் பின் மீரா தன் பெயரை ஆரவ் என மாற்றிக் கொண்டார். இதுகுறித்து கல்பனா கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே நான் அவரை விரும்பினேன், அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அவர் அறுவை சிகிச்சைக்கு செல்லும் போது கூட நான் அவருடன் சென்றேன்" என்று கூறினார்.
ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாகப் பிறந்தேன், ஆனால் நான் எப்போதும் ஆண் என்றுதான் நினைத்தேன். எனது பாலினத்தை மாற்ற நான் அறுவை சிகிச்சை செய்ய விரும்பினேன். 2019 டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சை செய்தேன். காதலில் எல்லாம் நியாயமானது தான். அதனால் தான் நான் என் பாலினத்தை மாற்றினேன்" என்றார். சமீபத்தில் கல்பனாவை ஆரவ் திருமணம் செய்துள்ளார். இந்த செய்தி ராஜஸ்தானில் தற்போது பேசுபொருளானதுடன் அவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.