இரு பெண்கள் புகார் தெரிவித்த ஆடியோவால் கர்நாடகாவைச் சேர்ந்த மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் பைலஹோங்கலா தாலுகா உள்ளது. இங்கு நெகிலஹலா என்ற லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சுமாவி பசவ சித்தலிங்கா(28).
இன்று இவர் அறையை விட்டு வெளியே வராததால் அவரது உவியாளர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், சித்தலிங்கா கதவைத் திறக்கவில்லை. இதனால் அவரது உதவியாளர்கள், ஜன்னல் வழியே பார்த்த போது மடாதிபதி சுமாவி பசவ சித்தலிங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சித்தலிங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுபபி வைத்தனர்.
போலீஸார், மடாதிபதி அறையைச் சோதனை செய்த போது ஒரு கடிதம் சிக்கியது. கர்நாடகாவில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மடத்திற்குச் சொந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு, லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் இரு பெண்கள் பல மடாதிபதிகள் மீது புகார்களைத் தெரிவிக்கும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் சுமாவி பசவ சித்தலிங்கா பெயரும் இருந்துள்ளது. தன்பெயரும் இந்த விவகாரத்தில் வெளியானதால் சித்தலிங்கா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.