செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் இன்று வழங்கினார்.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2000 ம் ஆண்டு பிறந்த மகன் கண்மணி. பள்ளிப்படிப்பை முடிக்கும்போது பாலின மாறுபாடு அடைந்துவந்த மகனை ஏற்க குடும்பத்தினர் மறுத்தனர். 2017 ம் ஆண்டு 12 ம் வகுப்பை முடித்தவுடன் வீட்டிலிருந்து வெளியேறி, விடுதியில் தங்கி செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.
ஐந்தாண்டு சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதன் மூலம் அந்த சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகிவற்றை கவுன்சிலின் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கௌரி ரமேசும் உடனிருந்து, பாராட்டு தெரிவித்தார். வழக்கறிஞர் ஆனதுடன் நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரியில் உள்ள சந்துரு லா அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாக கண்மணி தெரிவித்தார்.