
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் தலைமைக் காவலர் அளித்த சாட்சியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைக் காவலர் பியூலா செல்வகுமாரி நீதிமன்றத்தில் ஆஜராகி அளித்த சாட்சியில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 10 காவலர்களும் மீண்டும் மீண்டும் தாக்கி உடல் முழுவதும் கொடுங்காயங்கள் ஏற்படுத்தினர். அதனால்தான் அவர்கள் இறந்து போனார்கள். காவலர்கள் ஜெயராஜை கொடுமையாக தாக்கியபோது அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர் இருக்கிறது என்றும் இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம்.
பென்னிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்புக் கோரினார். இதனால் காவலர்கள் அடிப்பதை நிறுத்தினர். அப்போது, அறையில் இருந்து வெளியே வந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்ற காவலர்களைத் திட்டி ஏன் அவர்களை அடிக்காமல்விட்டு வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி மீண்டும் மீண்டும் அடிக்க சொன்னார். இதேபோன்று 4 முறை காவலர்கள் அடிப்பதை நிறுத்தியபோது ஆய்வாளர் ஸ்ரீதர் மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு தந்தை, மகனை உயிர் போகின்ற அளவிற்கு அடிக்க வைத்துள்ளார்" என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.