தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்திற்கு உட்பட்ட கடம்பூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கைதான டிரைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கடம்பூர் அருகே உள்ள தெற்கு சிந்தலக்கட்டை காலனி தெருவை சேர்ந்தவர் எட்வர்டு ராஜ். இவருடைய மகன் கனிராஜ் (23). ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கனிராஜை கைது செய்தனர்.
இவர் மீதான வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி. சுவாமிநாதன் தீர்ப்பு கூறினார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கனிராஜிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.