
உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பிரமுகருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத் தண்டனை 10 மாதங்களாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த முகமது மொனின்வார் ஹொசைன் உள்ளிட்ட சிலர் மீது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்ததாகவும் திருப்பூர் காவல்துறை கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகமது மொனின்வார் ஹொசைனுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்ததற்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மற்ற குற்றவாளிகளுக்கு 10 மாதம் சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மூன்றாண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக் கோரி மொனின்வார் ஹொசைன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகமது சைபுல்லா, மனுதரார் வாழ்வாதாரத்திற்கு புலம் பெயர் தொழிலாளராக மட்டுமே இந்தியா வந்துள்ளார். இவரை அகதிகள் அல்லது வியாபார நோக்கோடு ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவராக மட்டுமே கருத வேண்டும். மேலும் இந்தியாவில் மனுதரார் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டதை போன்று குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி, போலி ஆவணங்கள் தயாரித்தார் என்று மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிக்கையின் அடிப்படையில் அவரை வியாபார நோக்கோடு ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவராக தான் கருத வேண்டும் என கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை 10 மாதமாக குறைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.