தங்கக்கடத்தல் வழக்கு: சிறையில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

சிவசங்கர்
சிவசங்கர்தங்கக்கடத்தல் வழக்கு: சிறையில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிசெய்கிறார்கள். இவர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்தில் அரபு அமீரகத்தின் துணை தூதரகம் இயங்கி வருகிறது.  கடந்த 2020 -ம் ஆண்டு இந்த அலுவலகத்துக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்வந்தது.

இந்நிலையில், போலி அடையாள அட்டையுடன் அமீரகத்திற்கு அந்தப் பார்சலைப் பெறவந்தார்  தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸரித்குமார். சுங்கப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில்  வெளிவந்த மந்திரப்  பெயர்தான் ‘ஸ்வப்னா சுரேஷ்’.

இதனைத் தொடர்ந்து, பார்சலை விடுவிக்க பெரும்  அழுத்தம் கொடுத்து சிரத்தை எடுத்த ஸ்வப்னா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வரிசையாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 98 நாள்கள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர்

இந்நிலையில் சிலவாரங்களுக்கு முன்பு மீண்டும் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது. தங்கக்கடத்தல் வழக்கோடு, கருப்புப் பணம் பரிமாற்றம், டாலர் கடத்தல் வழக்கு, கேரள அரசின் லைப் மிஷின் திட்டத்தில் ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகளின் பின்னணியில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக ஸ்வப்னா சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. எர்ணாகுளம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கரை அமலாக்கத்துறை தன் கஸ்டடியில் எடுத்து விசாரித்துவிட்டு மீண்டும் கைது செய்தது. இந்தமுறைக் கைது செய்யப்பட்டபோது, சிவசங்கரை வரும் 21-ம் தேதி வரைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் சிறையில் திடீர் உடல்நலக்குறைவால் சிவசங்கர் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கொச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in