யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு அனுமதி

யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு அனுமதி

அமெரிக்கா உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.

வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் வேலை செய்து வருபவர்கள் இந்தியாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கு பணம் அனுப்புவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது மத்திய அரசு. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் வெளிநாட்டு கைபேசி எண்ணை பயன்படுத்தி இந்திய வங்கி கணக்குகளுக்கு கைபேசி பணப் பரிவர்த்தனை செயலியான யுபிஐ மூலம் இனி ரூபாயில் பண பரிவர்த்தனை செய்யலாம் என்றும் இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு அனுமதியை அளித்துள்ள இந்தியாவின் தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சர்வதேச கைபேசி எண் மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்க வைத்து வந்தனர். அதன்படி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் வாழும் இந்தியர்கள் ரூபாயில் பணப் பரிவர்த்தனை செய்ய என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ வங்கி கணக்குகளை தொடங்கி தங்களின் சர்வதேச கைபேசி எண்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை வரும் 30-ம் தேதிக்குள் தயார்நிலை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தந்த நாடுகளின் கைபேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் அது விரிவாக்கம் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in