'மேன்டூஸ்' புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்றான செம்பரம்பாக்கம் இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், கடந்த நவ.2-ம் தேதி 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு படிப்படியாக நீரில் அளவு குறைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
கடந்த இரு தினங்களாக 'மேன்டூஸ்' புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் காரணமாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 20.37 அடியாக உயர்ந்துள்ளது.
'மேன்டூஸ்' புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 12.00 மணிக்கு 100 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படும் எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.