சூட்கேஸ், உள்ளாடைக்குள் கத்தை கத்தையாக ரூ.3.37 கோடி ஹவாலா பணம்: விமானநிலையத்தில் சிக்கிய 'குருவி'

சிக்கிய வெளிநாட்டு பணம்
சிக்கிய வெளிநாட்டு பணம்சூட்கேஸ், உள்ளாடைக்குள் கத்தை கத்தையாக ரூ.3.37 கோடி ஹவாலா பணம்: விமானநிலையத்தில் சிக்கிய 'குருவி'

சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூருக்கு உள்ளாடையில் மறைத்து கடத்த முயன்ற ரூ.3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், சவுதி அரேபியா ரியால் கரன்சி ஆகிய வெளிநாட்டு பணத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் அந்தப் பயணியை விசாரித்த போது, அவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்வதற்காக வந்திருந்தார் என்று தெரியவந்தது. ஆனால், விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை சுங்க அதிகாரிகள் ரத்து செய்தனர்.

அத்துடன் அந்தப் பயணியை தனியறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது, அந்தப் பயணியின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக, அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன்பின்பு அந்தப் பயணியின் சூட்கேஸைத் திறந்து சோதித்தனர். அதற்குள் 9 ரகசிய அறைகள் இருந்தன. அவைகளை உடைத்துப் பார்த்தபோது, அவைகளுக்குள்ளும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மற்றும் சவுதி அரேபியா ரியால் கரன்சி பெருமளவு இருந்தன. அவைகளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்தப் பயனிடம் இருந்து மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர் மற்றும் சவுதி அரேபியா ரியால் ஆகிய வெளிநாட்டு பணத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். சுங்க அதிகாரிகளின் விசாரணையில், இந்தப் பயணி வேறு யாரோ கொடுத்து விட்ட பணத்தை கூலிக்காக எடுத்து செல்கிறார் என்று தெரிய வந்தது.

எனவே, இது கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், வேறு ஒருவர் அந்தப் பணத்தை, இவரிடம் கொடுத்து சிங்கப்பூருக்கு கடத்துகிறார் என்றும் தெரிய வந்தது. எனவே, இவரிடம் இந்த ஹவாலா பணத்தை கொடுத்து விட்ட மர்ம ஆசாமி யார் என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான ஹவாலா பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in