பொன்மலை பணிமனையில் ரயில் என்ஜின் மோட்டார் கடத்தல்: உயர் பாதுகாப்பு வளையத்தில் நடந்த துணிகரம்

மின் மோட்டாரை கடத்தியவர்கள் மற்றும் லாரியுடன்  போலீஸார்
மின் மோட்டாரை கடத்தியவர்கள் மற்றும் லாரியுடன் போலீஸார்

உயர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து  ரயில் என்ஜினுக்கு பொருத்தப்படும் மின்  மோட்டார் கடத்தப்பட்டிருப்பது  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் மிக முக்கியத்துவமும்,  பழமையும் வாய்ந்தது  திருச்சியில் உள்ள பொன்மலை  ரயில்வே பணிமனை.  இந்த பணிமனையில் இருந்துதான் டார்ஜிலிங், ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் பயணிக்கக்கூடிய மலை ரயில்களுக்கான ரயில் என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. 

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை பலகட்ட பாதுகாப்பு மிகுந்தது. அப்படி பாதுகாப்பு அதிகமுள்ள  ரயில்வே தொழிற்சாலையில் இருந்து  50 லட்சத்திற்கும் மேல் மதிப்புடைய ரயில் என்ஜினுக்கு பொருத்தப்படும் ட்ராக்சன் மோட்டாரை லாரி மூலம் கடத்திச் சென்றுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பொன்மலை  ரயில்வே பணிமனை
பொன்மலை ரயில்வே பணிமனை

பொன்மலை ரயில்வே பணிமனையில்  தமிழகம் மற்றும் வடநாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு டீசல் என்ஜின் பராமரிப்பு, டெமு இன்ஜின் பராமரிப்பு, பயணிகள் ரயில் பெட்டிகள் பாடி கட்டுதல், உலகப்புகழ் பெற்ற மலைப் பாதைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, நீராவி ரயில் என்ஜின்கள், சரக்கு ரயில் முழு உற்பத்தி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலகட்ட பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் உதிரி பாகங்கள் இந்த ரயில்வே பணிமனைக்கு  லாரிகளில் தினந்தோறும் கொண்டு வரப்படுவது வழக்கம். அதேபோல் தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்வதும் வழக்கம். 

இந்தநிலையில் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் தலைமையிலான ரயில்வே போலீஸார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாதுகாப்புப்படை ஆய்வாளர் மற்றும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் ரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீஸார், லாரியில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது தொழிற்சாலையில் இருந்து மின் மோட்டாரை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த மின் மோட்டாரின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோபால் (30), மணிகண்டன் (29) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீஸார்  தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த மின் மோட்டார்
அந்த மின் மோட்டார்

அப்போது ரயில்வே தொழிற்சாலையில் தூய்மை பணி நடந்து வருவதாகவும், அங்கு இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாகவும், இதனால் தினமும் லாரிகளில் தொழிற்சாலைகளில் இருக்கும் தேவையற்ற குப்பை மற்றும் மணலை அள்ளிக் கொண்டு வெளியே கொட்ட வருவதாகவும், அப்படி வந்தபோது மின் மோட்டாரை லாரியில் வைத்து மேலே மணலை கொட்டி கொண்டு வந்ததாகவும், அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.. 

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார்  வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். 

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த ரயில்வே நிர்வாகம், இந்த வழக்கில் மின் மோட்டார் திருடு போனது குறித்து அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் கிரண், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், காவலர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து  உத்தரவிட்டிருக்கிறது. 

பணிமனையில் உள்ளே வரக்கூடிய வாகனங்களை பலகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் உள்ளேயும், வெளியேயும் ஆர்பிஎப் வீரர்கள் அனுமதிக்கின்றனர் என்ற நிலையில் பல டன் எடையுடைய ரயில் என்ஜின் உந்து சக்திக்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார் எப்படி வெளியே சென்றது? என்று கேள்வி எழுப்பும் பணிமனை தொழிலாளர்கள்,   இதில் பெரும் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், இதை சாதாரணமாக விட்டு விடாமல்  சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும் தெரிவிக்கிறார்கள். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in