மதுரை டு வாராணசி: உறுதியானது தெற்கு ரயில்வேயின் அடுத்த தனியார் ரயில் சேவை!

மதுரை டு   வாராணசி: உறுதியானது தெற்கு ரயில்வேயின் அடுத்த தனியார் ரயில் சேவை!

பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயின் இரண்டாவது தனியார் ரயில்வே சேவை மதுரையிலிருந்து வாராணசி வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களை பொதுமக்கள் எளிதாக சுற்றிப் பார்த்து வர இந்திய ரயில்வே "பாரத் கௌரவ் ரயில்கள்" திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி அன்று தொடங்கியது.

இந்தத் திட்டத்திற்காக 8 பயண சேவையாளர்கள் தெற்கு ரயில்வேயில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். அதில் முதல்கட்டமாக கோயம்புத்தூர் - சீரடி பாரத் கௌரவ் ரயில் சேவை கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் தொடங்கியது. தற்போது, இரண்டாவது கட்டமாக மதுரை - வாராணசி பாரத் கௌரவ் ரயில் சேவை வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த 12 நாட்கள் சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு பூரி, கொல்கத்தா, கயா, வாராண சி வழியாக பிரயாக்ராஜ் சங்கம் செல்லும். மறுமார்க்கத்தில் விஜயவாடா, சென்னை வழியாக மதுரை வந்து சேர இருக்கிறது. இந்த ரயிலுக்காக பயண சேவையாளர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார். பயண சேவையாளர் கடந்த ஜூன் 9-ம் தேதி அன்று 6 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் ஒரு சமையல் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக ரயில் பதிவு கட்டணம் ரூ.1 கோடி செலுத்தி பதிவு செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in