2023-2024 கல்வி ஆண்டில் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து திட்டமிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த கல்வியாண்டில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அன்றைய தினம் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி முதல் 1 முதல் 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்" என்றார்.
மேலும், " அடுத்த ஆண்டு மார்ச்18-ம் தேதியன்று பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வும், ஏப்ரல் 8-ம் தேதியன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கும். இந்த கோடை விடுமுறையில் மாணவர்களை நீர்நிலைகளுக்கு தனியாக அனுப்ப வேண்டாம் . அவர்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று அதைப்பயன்படுத்த பழக்கப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.