
வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் அறிவித்தவாறு நேற்று இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி இன்று இரவு அல்லது நாளைக்குள் தமிழக கடலோரத்தை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் விளைவாக நேற்று 14 மாவட்டங்களிலும் இன்று 17 மாவட்டங்களிலும் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்படி அறிவித்தவாறு தமிழகம் முழுவதிலும் 17 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்து வருகிறது. இது தவிர மேலும் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.