அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கட்டாயம் பங்கேற்று, இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல், கற்பித்தல், பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி ஆணையர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்.
இடைநிற்றல், மாணவர்சேர்க்கை, கற்றல், கற்பித்தல், பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.
கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். மேலும் கிராமப் பஞ்சாயத்துக்கள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட முடியும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.