உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முட்டுக்கட்டை போடுகிறாரா? என்று யூடியூப்பர் சவுக்கு சங்கர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், நிபந்தனைப்படி சவுக்கு சங்கர் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட்ட சவுக்கு சங்கர் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்குச் சொந்தமான பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனலை தற்போது உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார். கதிர் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சித்திரம் டிவி என்ற சேனலை தற்போதுள்ள பிளாக் ஷீப் அலுவலகத்தில் விரைவில் தொடங்க உள்ளார். மேலும் பிளாக் ஷீப் அலுவலகத்தில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த விஜயவாடாவை சேர்ந்த பாலஜி என்பவர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி இரவு அலுவலக சர்வர் அறையில் உயிரிழந்தார். மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து 4 நாட்கள் ஆன நிலையில் மரணம் தொடர்பாக தற்போது வரை சம்பவ இடம் சென்று காவல்துறையினர் தடயங்களை சேகரிக்கவோ? மாரடைப்பு காரணமாகத்தான் பாலாஜி உயிரிழந்தாரா? என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை நடத்தவோ இல்லை. அதுமட்டுமல்லாமல் பிளாக் ஷீப் யூடியூப் அலுவககத்தில் உள்ள அன்றைய தினத்திற்கான அனைத்து சி.சி.டி.வி பதிவுகளையும் அந்த நிறுவனத்தார் அழித்துள்ளனர். இது தடயங்களை அழிக்கும் சட்டவிரோத செயல். இதையும் காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை.
உயிரிழந்த பாலாஜியின் மனைவி விஜயவாடாவில் இருந்து வந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றுவிட்டதால் அவரது குடும்பத்தாரை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தும் உதயநிதிக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் காவல்துறையினர் இதுவரை அங்கு விசாரணை நடத்த செல்லவில்லையா? அல்லது காவல்துறையினரை விசாரணை செய்ய விடாமல் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முடக்கி வைத்துள்ளாரா?.
பாலாஜியின் உயிரிழப்பை கொலை என்று கருதவில்லை. ஆனால் சந்தேக மரணம் ஒன்று நடந்தால் அதை விசாரிக்கும் கடமை காவல்துறை உள்ளது. மாறாக காவல்துறையினர் இன்னும் தனது பணியை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம். சட்டவிரோதமாக தடயங்களை அழிக்கும் வகையில் சி.சி.டி.வி பதிவுகளை அழிக்கும் உரிமையை பிளாக் ஷீப் நிறுவத்தாருக்கு யார் கொடுத்தது? அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.