கடலூர் மத்திய சிறையில் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு அன்று இரவே கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடலூர் மத்தியச் சிறையிலிருந்து வரும் சவுக்கு சங்கரை, பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன்னை பார்க்க வரும் பார்வையாளர்கள் வருகைக்குத் தடை விதித்துள்ள கடலூர் மத்தியச் சிறை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிறை நிர்வாகத்தின் செயலை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தனது மகனை அரசியல் காரணங்களுக்காகப் பழி வாங்க வேண்டாம் எனச் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பார்வையாளர்கள் சந்திப்பை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.