நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா சாஸ்த்ரா பல்கலைக்கழகம்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சாஸ்த்ரா பல்கலைக்கழகம்
சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்படும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தையே தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால், அதை அகற்ற வேண்டும் என அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி நீர்நிலை என்பதற்கு வருவாய் துறை ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் எந்த நீர்நிலையும் இல்லை என சாஸ்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலம் நீர்நிலையா, எந்த பகுதி நீர்நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அரசின் அறிக்கைக்கு சாஸ்த்ரா பதிலளிக்க அனுமதித்த நீதிபதிகள், அதன் பின் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என சுதந்திரமான முறையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in