
அலைபேசி மற்றும் தொலைக்காட்சி விற்பனையில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் சாம்சங் நிறுவனம், இந்தியாவில் 1.15 கோடி ரூபாய் விலையில் புதிய மைக்ரோ எல் இ டி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகெங்கும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் அல்ட்ரா - ப்ரீமியம் லக்சரி மைக்ரோ 110 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எல்இடி டிவிக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒளி மற்றும் வண்ணங்களை மிக நேர்த்தியாக வழங்குவதால், இந்த டிவியை பார்ப்பவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும். அதிலிருக்கும் துல்லியத்தன்மை வேறெதிலும் இல்லாத வகையில் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளின் ஒளித்திறன் நாளடைவில் மங்குவது போல இதில் ஒளித்திறன் மங்குவதில்லை என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டிவியை பார்க்கும் போது, ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் கிடைக்குமாம். 24 லட்சம் மைக்ரோ மீட்டர் அளவுள்ள சிறிய எல்இடிக்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். உலகிலேயே மிகவும் கடினமான உலோகம் என்று அழைக்கப்படும் சஃபைர் கொண்டு இந்த தொலைக்காட்சியை தொழில்நுட்ப நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஆம்பியண்ட் பிளஸ் மோடில் இந்த டிவியை வைத்தால், சுவற்றிலேயே ஒரு டிஸ்ப்ளேபோல இது மாறிவிடும் என்கிறார்கள். இவ்வளவு சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த டிவியின் விலை தான் கேட்பவர்களை அதிர வைக்கிறது. இந்திய ரூபாயில் ரூ.1,14,99,000. கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சம் என்று சாம்சங் இணையதளத்தில் விலை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.