கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு சிலையை திருடிச் சென்றார்: சிசிடிவியில் சிக்கிய திருடன் `தவக்களை'
ஜெயின் கோயிலில் சாமி சிலையை திருடிய வழக்கில் ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் சிலையை மீட்டனர். சாமி கும்பிடுவது போல் சென்று சிலையை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை சூளை சுப்பா தெருவை சேர்ந்த தொழிலதிபர் வினய்ஜெயின்(34). இவரது வீட்டின் கீழ்தளத்தில் மகாவீர் ஜெயின் கோயில் உள்ளது. கடந்த 27-ம் தேதி ஜெயின் கோயிலில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் கோயில் இருந்த ஒரு அடி உயரமுள்ள பித்தளையால் ஆன மகாவீர் சாமி சிலையை திருடிச்சென்றார். இது குறித்து வினய்ஜெயின் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சாமி சிலையை திருடிச் சென்ற நபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சூளை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற தவக்களை என்பதும், இவர் சம்பவத்தன்று கோயிலில் சாமி கும்பிடுவதும் பின்னர் உள்ளே சென்று சாமி சிலையை திருடிச் சென்றதும் தெரியவந்தது. விஷ்ணுவிடம் இருந்து சிலையை பறிமுதல் செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.