
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 8 மாதங்களாக ஒப்பந்தப்பணியாளராக பணிசெய்துவந்த பிளம்பருக்கு ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர் உயிரையே மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நடுநாலுமூலை கிணறு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(46) பிளம்பிங் வேலை செய்துவந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் திருச்செந்தூர் நகராட்சியில் பிளம்பராக இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த எட்டுமாதங்களாக இவருக்கு நகராட்சியில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. தன் கைக்காசைப் போட்டு பல இடங்களில் பணி செய்ததாக நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து ரவிக்குமார் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவருக்கு வேலை செய்த தொகை கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமாலை தன் வீட்டில் யாரும் இல்லாதபோது ரவிக்குமார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துத் தகவல் தெரிந்ததும் திருச்செந்தூர் போலீஸார் ரவிக்குமார் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 8 மாத ஊதிய பாக்கியால் ஒப்பந்தப் பணியாளர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.