மலையாளிகளின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகைக்காக சபரிமலை நடை வரும் 6-ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஓணம் திருநாளில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து தயாராகி வருகின்றனர்.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் நைஷ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இங்கு மண்டல கால பூஜையின் போதும், ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாள்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படும்.
இதுபோக முக்கிய பண்டிகைகளின் போதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படும். மலையாளிகளின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்திருநாள் அடுத்த மாதம் வருகிறது. இதை முன்னிட்டு சபரிமலை நடை வரும் 6-ம் தேதி திறக்கப்பட உள்ளது. 8-ம் தேதி நடைபெறும் திருவோண தின சிறப்பு பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஓணத்தை முன்னிட்டு திறக்கப்படும் சபரிமலை கோயிலானது, வரும் 10-ம் தேதி மூடப்படும். தற்போது சபரிமலை மேற்கூரையில் தண்ணீர் கசியும் பகுதியில் அதைச் சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பணியை விரைந்து முடிக்கவும் தேவசம்போர்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஓணப்பண்டிகைக்காக திறக்கப்பட்ட பின்பு, வழக்கம் போல் மலையாள மாதப்பிறப்பான கன்னிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்டம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு, 21-ம் தேதி மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.