அரசுத் தேர்வுகளில், விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுத் தேர்வுகளில், விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்துள்ளது.

புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்று பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக்  கூறி,  பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுவை  பொதுப்பணித் துறையில்  எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய  அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு  உத்தரவிட்டிருந்தது. இதன்படி, 2016-ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படும் எனவும் உத்தரவாதம் அளித்து புதுச்சேரி அரசுத்தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசுப் பணியில் எந்த  சூழ்நிலையிலும் முறைகேட்டை அனுமதிக்க முடியாது எனவும் அரசியல் சட்ட விதிகளைப்  பின்பற்றியே அனைத்து நியமனங்களும் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். தற்காலிக நியமனங்களிலும் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து, விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். பணி நியமனங்கள் தொடர்பாகப் புதுச்சேரி அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அனைத்து நியமனங்களும் போட்டித்தேர்வு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தேர்வு நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in