துருக்கி ஆப்பிள் வாங்கி தருவதாக ரூ.1.24 கோடி மோசடி: சென்னை பல் டாக்டர் கைது

பல் டாக்டர் அரவிந்த்
பல் டாக்டர் அரவிந்த்துருக்கி ஆப்பிள் வாங்கி தருவதாக ரூ.1.24 கோடி மோசடி: சென்னை பல் டாக்டர் கைது

துருக்கியில் இருந்து ஆப்பிள் வாங்கி தருவதாக கோவை தொழிலதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி செய்த சென்னை பல் டாக்டரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (41). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் (33) என்பவர் அறிமுகமானார்.

அப்போது அரவிந்த், துருக்கியில் இருந்து குறைந்த விலைக்கு கன்டெய்னர் மூலமாக ஆப்பிள் வாங்கி தருவதாக ரமேஷிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரமேஷ் தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் வாங்கி வியாபாரம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, அவர் பல தவணைகளாக அரவிந்த் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.1.24 கோடி செலுத்தியதாக தெரிகிறது.

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் அரவிந்த் ஆப்பிள் அனுப்பவில்லை. இதனால் பணத்தைத் திருப்பி கேட்ட போதும், காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்த மோசடிக்கு பல் டாக்டர் அரவிந்த் மனைவி துர்கா பிரியாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட ரமேஷ், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்தை இன்று கைது செய்தனர். அவரது மனைவி துர்கா பிரியா மீதும் வழக்குப்பதிவு செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in