அதிகாலை ஒன்றாக மது அருந்தியபோது போதையில், `உங்களை கொலை செய்து விடுவேன்' என மிட்டல் விடுத்த ரவுடியை கூட்டாளிகளே கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 4 பேரை கைது செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவுடி பம்பு அஜய்(21). இன்று அதிகாலை 1.30 மணியளவில் ரவுடி அஜய் தனது நண்பர்களான தண்டையார்பேட்டை ஜீவா(21), அன்பரசு(25), ஜான்(18), மனோஜ்(19), குப்புராஜ்(21) மற்றும் வண்ணாரப்பேட்டை ரவுடி விக்கி என்ற சொலுஷன் விக்கி(28) ஆகியோருடன் சேர்ந்து சுனாமி குடியிருப்பு எச்.பிளாக் எதிரே உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதை தலைக்கேறி ரவுடி அஜய் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பர்கள் எல்லோரையும் வெட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ரவுடி சொலுஷன் விக்கி மற்றும் அவனது கூட்டாளிகள் அஜய் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் ரவுடி அஜய் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சொலுஷன் விக்கி, ஜீவா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரவுடி அஜய், மீதும், ரவுடி விக்கி மீதும் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு சிலர் முன்பு ரவுடி அஜய்யை தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற போது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.