
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு கேரளத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு பகுதியில் பெண் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியைப் பறித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஜினில் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை எஸ்.ஐ அருளப்பன் தலைமையிலான போலீஸார் கேரள மாநிலம் பாறசாலைக்குச் சென்று ஜினிலைக் கைது செய்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜினில், தமிழகத்தில் குமரிமாவட்டம் உள்பட பல பகுதிகளிலும் இப்படித் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு, அவற்றைக் கொண்டு கேரளத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜினிலைப் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரோடு சேர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.