நடிகை பாபிலோனாவின் தம்பி விக்னேஷ் என்பவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பிரபல தமிழ்த் திரைப்பட கவர்ச்சி நடிகை பாபிலோனா. இவரின் தம்பி விக்னேஷ். மது போதையில் அவரின் வீடு அருகே கடை நடத்திவருபவரை அடித்து 1700 ரூபாய் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விக்னேஷ் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் விசாரணை செய்வதற்காக அவர் காவல் நிலையம் அழைக்கப்பட்டுள்ளார். அப்போது போதையிலிருந்த விக்னேஷ் அங்கிருந்த காவலர்களிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விருகம்பாக்கம் போலீஸார் விக்னேஷ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார் மற்றும் பட்டாக் கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விக்னேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக போதையில் சாலையில் செல்வோர்களிடம் ரகளை செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அதுபோல் போதையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் தகராறு செய்தது, காவலர்களை தாக்கியது எனப் பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. தொடர்ந்து விக்னேஷ் காவல்துறையினரிடம் போதையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.