இந்த முறையாவது ஆருத்ரா தரிசனத்தை கால தாமதமின்றி நடத்துங்கள்: அமைச்சர், தீட்சிதர்களுக்கு வேண்டுகோள்

இந்த முறையாவது ஆருத்ரா தரிசனத்தை கால தாமதமின்றி நடத்துங்கள்: அமைச்சர், தீட்சிதர்களுக்கு வேண்டுகோள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை (ஜன.6) நடைபெற உள்ள மார்கழி ஆருத்ரா தரிசனத்தை காலதாமதமின்றி உரிய நேரத்தில்  நடத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் ஆகியோருக்கு காங்கிரஸ் பிரமுகர் ஜெமினி ராதா கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில்," உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் தேரோட்டமும்,  தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம்,  வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம்.

அப்படி கடந்த ஆண்டு  மார்கழி மாதத்தில்  நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் திரண்டு இருந்தனர். வழக்கமாக மதியம் ஒரு மணி அளவில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் தீட்சிதர்களின் அலட்சியத்தால் மாலை 4 மணிக்கு மேல் தான் நடைபெற்றது.  இப்படி காலதாமதக்கப்பட்டதால் காலை 10 மணி அளவில் கோயிலுக்குள் வந்த பக்தர்கள் மாலை ஆறு மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 

அந்த நேரத்தில் கோயிலை விட்டு வெளியேற முடியாமலும்,  இயற்கை உபதைகளுக்கு உள்ளாகியும், அதிக கூட்டம் மற்றும் பசி ஆகியவற்றால் ஒரு சிலர்  மயக்கம் அடைந்தும்  உடல்நிலை பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது. அவர்களுக்கு உரிய முதலுதவி அளிக்க முடியாத நிலையும் இருந்தது.

எனவே, இந்த ஆண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.  எப்போது தரிசனம் நடைபெறும் என்று தெரியாமலேயே பல மணி நேரங்கள் கோயிலுக்குள் காத்துக் கிடக்காமல் பக்தர்களின் நலன் கருதியும்,  ஆகம விதிகளின்படியும்  நாளை நடைபெற உள்ள மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவை காலதாமதமின்றி பொது தீட்சிதர்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோயில் அருகே தற்காலிக அவசர சிகிச்சை முதல் உதவி  மையமும் அமைக்க வேண்டும்" என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in