திருமணம் செய்ய மறுத்த காதலனை ஆசிட் வீசி கொலை செய்ய முயன்ற காதலி கைது செய்யப்பட்ட சம்பவம் ஹரியாணாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சிங் (25). பெற்றோர் இல்லாத இவர் சோனிபட்டில் உள்ள மயூர் விஹார் காலனியில் அத்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கோஹானா கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி (23) என்பவருடன் ஷியாம் சிங்கிற்கு சில நாட்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி போனில் பேசி மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், திடீரென அஞ்சலி தனது தாயுடன் ஷியாம் சிங் வீட்டிற்கு வந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம் சிங், திருமணம் செய்ய சிறிது கால அவகாசம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், அஞ்சலிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்தது ஷியாம் சிங்கிற்குத் தெரிய வந்தது. அத்துடன் அஞ்சலி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இதனால் ஷியாம்சிங் அஞ்சலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால், அஞ்சலி தொடர்பு போனில் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். அத்துடன் நீ எனக்குக் கிடைக்காவிட்டால், யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்றும் போனில் மிரட்டியுள்ளார். இதனால், அவருடன் போனில் பேசுவதையும் ஷ்யாம் சிங் நிறுத்தியுள்ளார்.
இதனால் தனது காதலனின் புகைப்படத்துடன் பஹதுர்கருக்கு அஞ்சலி வந்துள்ளார். இந்த நிலையில் பால் வாங்குவதற்காக ஷியாம் சிங் கடைக்கு வந்துள்ளார. அவரைப் பார்த்த அஞ்சலி மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசினார். இதில் ஷியாம் சிங்கின் கை, கால், முகம் ஆகியவை வெந்து போனது இதனால் அலறித்துடித்த ஷியாம் சிங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சலி தலைமறைவானார்.
இந்த நிலையில், ஷியாம் சிங்கின் அத்தை அளித்த புகாரின் பேரில், அஞ்சலியை போலீஸார் தேடி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். திருமணம் செய்ய மறுத்த வாலிபரை ஆசிட் வீசி இளம்பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் ஹரியாணாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.