மும்பை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை எல்டிடிஈ அமைப்புக்காக, மோசடி செய்து எடுக்க முயன்றவர்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்பு கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர், 40 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தார். அவர் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது.
இதைத் தெரிந்து கொண்ட எல்டிடிஈ இயக்கத்தைச் சேர்ந்த, ஐரோப்பாவில் வசிக்கும் உமாகாந்தன் என்பவர், அத்தொகையை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்ய திட்டமிட்டு இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
ஹமிதாவிடமிருந்து பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து, வங்கி கணக்கில் இருந்த 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர்.இதற்கிடையே போலி பாஸ்போர்ட் வழக்கில் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் சிக்கினர். பின், அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒரு கட்டத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில், நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து, தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.