கருணை காட்ட முடியாது; சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்கவும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு

கருணை காட்ட முடியாது; சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்கவும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு

தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, அதன் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, குறிப்பிட்ட அந்த நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எனவும், அதனால் அதற்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்ததாகவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத்துறை தரப்பில், கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள், அறநிலையத்துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பேராசை பிடித்த சிலரின் இந்த மோசடியில் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக் கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in