'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

நிலவில் சந்திரயான் 3
நிலவில் சந்திரயான் 3

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு இந்தியாவால் வைக்கப்பட்டுள்ள 'சிவசக்தி' என்ற பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியனின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சந்திரனுக்கான இந்தியாவின் மூன்றாவது மிஷனாக சந்திரயான் 3 விண்கலம்,  கடந்த வருடம் ஜூலை மாதம் 14 ம் தேதியன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு ஆகஸ்ட் 23 அன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 

கட்டுப்படுத்தப்பட்ட சந்திர தரையிறக்கத்தை அடைந்த 4-வது நாடாகவும் இந்தியா சாதனை படைத்தது. சந்திரனில் தரையிறங்கிய பத்து நாட்கள் ஆய்வு செய்தபிறகு லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் ஓய்வுக்கு சென்றது. இதனிடையே அவற்றில் உள்ள புரபல்சன் தொகுதியானது லேண்டரிலிருந்து பிரிந்து சந்திரனின் சுற்றுப்பாதையில் இணைந்தது.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளத்திற்கு சிவசக்தி என பெயரிடுவதாக பிரதமர் மோடி அப்போது அறிவித்தார். சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டிருக்கிறது. சக்தி அந்தத் தீர்வுகளை செயல்படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக சிவசக்தி என பெயரிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவித்த 6 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி ஒன்றியத்தின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு, சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ஸ்டேடியோ சிவசக்தி என்ற பெயரை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்த இடம் இனி சிவசக்தி என்றே விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும். இது இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்று கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in