
கைவிடப்பட்ட வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத ரூ.35 ஆயிரம் கோடியை உரியவர்களிடம் சேர்க்க ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தாண்டு பிப்ரவரி நிலவரப்படி வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் தொகையாக 35 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. வங்கிக்கணக்கு விவரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இறந்தவர்கள், காசோலை புத்தகம், வங்கிப் புத்தகத்தை தொலைத்து கணக்கை மறந்தவர்கள் என பல பிரிவுகளில் உரிமை கோரப்படாமல் வங்கிகளில் பணம் இருக்கிறது. இவற்றை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியாக UDGAM என்ற இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி இருக்கிறது.
ஆகஸ்ட் 17ம் தேதி 7 வங்கிகளுடன் இணைந்து தொடங்கப்பட்ட இணையதளத்தில் இதுவரை 30 வங்கிகள் இணைந்து இருக்கின்றன. கைவிடப்பட்ட டெபாசிட் வங்கிக்கணக்கு விவரங்களை வங்கிகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றன. அதில், தேர்தல் வாய்ப்பு கேட்கப்பட்ட விவரத்தில் விவரங்களை பதிவிட்டு தேடுதல் வசதி உள்ளது. உரிமை கோரப்படாத 35 ஆயிரம் கோடி ரூபாயில் 90 சதவீத அளவிற்கு இந்த இணையதளத்தில் வங்கிகள் பதிவேற்றம் செய்து இருக்கின்றன.
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயக்கப்படாத கைவிடப்பட்ட கணக்குகளில் இருந்த தொகையை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் ஒப்படைத்துள்ளன. முதலீட்டாளர்களின் கல்வி விழிப்புணர்வு நிதி என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்தத் தொகையை கணக்கை கைவிட்டவர்கள், வாரிசுதாரர்கள் பணத்தை திரும்ப பெற வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை தங்களது உறவினர்கள் வங்கிக்கணக்கை தொடங்கி அதன் விவரத்தை தெரியாமல் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.