
நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் குறைவான விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களுக்குத் தகவல் வந்தது. ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு சிவகுருநாதபுரம், திருமலை ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. தடாலடியாக அந்த வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 4,750 கிலோ ரேசன் அரிசி, மூடை, மூடையாக கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி(55), பழனிசாமி(74) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும், சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளுக்குப் போய் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு கோழிப்பண்ணைகளுக்கு தீவனத்திற்கு விற்றுவந்தது தெரியவந்தது.