புழல் சிறையில் ராம்குமார் இறந்த வழக்கு: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் முக்கிய உத்தரவு

ராம்குமார், சுவாதி.
ராம்குமார், சுவாதி.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுவாதி
சுவாதி

இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், அங்கு மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.

ராம்குமார்
ராம்குமார்

ஆனால் ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தார்.

அதில், " சுவாதி கொலை வழக்கில் என் மகனுக்குத் தொடர்பு இல்லை. எனது மகனை வேண்டுமென்றே கொலை வழக்கில் சிக்க வைத்து கொலை செய்து விட்டனர். எனவே, ராம்குமார் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். மீனாட்சிபுரத்தில் உள்ள வீட்டில் ராம்குமாரை போலீஸார் கைது செய்த போது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் கூறினர். அவர்கள் தான் என் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். ராம்குமார் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தது முற்றிலும் தவறு. சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தற்கொலையா, இல்லையா என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளைப் பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in