
கரும்பு டன் ஒன்றிற்கு 4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற கரும்பு விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று 500க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் குவிந்து கரும்பு டன் 1 க்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், எஸ்ஏபி விலை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து அந்தப் பகுதியில் போலீஸாரால் பலத்தப் பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது. போலீஸாரின் பாதுகாப்பை மீறி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை கைது செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், ‘’அரசு தேர்தல் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் தருவதாக கூறினார்கள் கொடுக்கவில்லை. ஏஎஸ்பி உயர்த்த வேண்டுமென பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகிறார்கள் அதிகாரிகள்.
தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை பெற்றக் கடனை விவசாயிகளை கட்டச் சொல்வது எந்தவகையில் நியாயம்? ஆலை நிர்வாகத்திடமே வசூல் செய்ய வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.