கனமழையால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இன்றும் மழைநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும் அவலம் நீடித்து வருகிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளான போரூர், முகலிவாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும் தண்ணீர் வடியாமலேயே உள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டையில் ஏழு தெருக்களில் தற்போது பெய்த மழையில் இடுப்பளவு தண்ணீர் சூழப்பட்டுள்ளது. இந்த தெருக்களைச் சேர்ந்த சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. விஷப்பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்டவை தண்ணீரில் இருப்பதால் அப்பகுதியினர் அச்சத்திலிருந்து வருகிறார்கள்.
மழை நீரை அகற்ற பூவிருந்தவல்லி ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள் என அப்பகுதியினர் பிரதான சாலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து குழந்தைகளை தெர்மாகோல் மிதவை உதவியுடன் தெருக்களில் பிரதான சாலைக்கு அழைத்து வந்து விடுகின்றனர். மோட்டார் இயந்திரம் மூலம் தண்ணீர் விரைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.