
ரயில்வே டிக்கெட் முன்பதிவின் வேகம் தற்போதைய நிமிடத்துக்கு 25 ஆயிரம் என்பதிலிருந்து 2.25 லட்சம் டிக்கெட்டுகளாக உயரப் போகிறது என உறுதியளித்திருக்கிறார் துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்.
ரயில்வே முன்பதிவு மற்றும் விசாரணை தொடர்பாக பயணிகளின் நலன் நாடும் சேவைக்காக, மென்பொருட்கள் மேம்பாடு மற்றும் சர்வர்கள் சீரமைப்பு நடவடிக்கைகளை மத்திய ரயில்வே துறை முடுக்கி விட்டுள்ளது. இவை ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையின் ஐடி சார்ந்த சேவைகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல இருக்கின்றன.
இவற்றின் அங்கமாக தற்போது டிக்கெட் முன்பதிவின் வேகம், நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் என்றளவில் இருப்பதை, நிமிடத்துக்கு 2,25,000 என்பதாக எகிறச் செய்ய இருக்கிறது. மேலும், ரயில் போக்குவரத்து மற்றும் முன்பதிவு தொடர்பாகவும் நிமிடத்துக்கு 40 லட்சம் விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் மென்பொருள்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த வசதிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும் என ரயில்வே துறை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். டெல்லி ரயில் பவனில் இன்று(பிப்.3) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த வரிசையில் பயணிகள் வசதிக்கான, 24 மணி நேரமும் இயங்கும் ’ஜன் சுவிதா’ அங்காடிகள் சுமார் 2 ஆயிரம் ரயில் நிலையங்களில் கட்டமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.