வேலை காரணமாக ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்ற ரயில்வே பணியாளர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் கோட்டாறு குலாலர் தெருவைச் சேர்ந்தவர் மணி(55). நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ட்ராக் மேனாக பணிசெய்து வந்தார். இவர் தண்டவாளம் சரியாக இருக்கிறதா என நடந்து சென்று பார்ப்பது வழக்கம். அந்தவகையில் இவர் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து டவுண் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்று இன்று பணியில் ஈடுபட்டு வந்தார். ஒழுகினசேரி பாலம் அருகில் இவர் தன் ட்ராக் மேன் பணியில் இருந்தபோது நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலி நோக்கி சென்ற ரயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார் மணி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ரயில்வே ஊழியர் மணியின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, ரயில் நிலைய ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உயிரிழந்த மணிக்கு மதி என்ற மனைவியும் இருமகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.