இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் சக்கி ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது.
இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று மேக வெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல மண்டி மாவட்டத்திலும் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது. இச்சம்பவம் காரணமாக தர்மசாலா மாவட்டத்தில் உள்ள பால், சதர், துனாக், மண்டி மற்றும் லமதாச் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக காங்க்ரா, குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இமாசல பிரதேசத்தில் காங்ரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மவுர் மற்றும் மண்டி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இமாசல பிரதேசத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்க்ரா மாவட்டத்தில் நேற்று நீர் மட்டம் திடீரென அதிகரித்ததால் ஓடையில் சிக்கிய எட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 10 பேரை ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.