‘தந்தை வாங்கிய செல்போன் கடனுக்கு என்னை மிரட்டுகிறார்கள்’ - சின்னத்திரை தம்பதி வெளியிட்ட கதறல் வீடியோ

‘தந்தை வாங்கிய செல்போன் கடனுக்கு என்னை மிரட்டுகிறார்கள்’ -
சின்னத்திரை தம்பதி வெளியிட்ட கதறல் வீடியோ

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த தம்பதி அஞ்சலி பிரபாகரன். தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமான இவர்கள் இருவரும் இணைந்து தங்களது யூடியூப் சேனலில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அஞ்சலியின் தந்தை கண்ணன், கடந்த 2019-ம் ஆண்டு நீலங்கரையில் உள்ள செல்போன் விற்பனை கடையில் தனியார் வங்கியின் (idfc bank) மூலம் மாதத் தவணை முறையில் செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது கண்ணன் தனக்கு தெரிந்த நபர் என்ற முறையில் தனது மகள் அஞ்சலியின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கண்ணனும், அதன்பின் 2021-ம் ஆண்டு அவரது மனைவியும் காலமாகிவிட்டனர். இதனையடுத்து கடந்த வாரம் கண்ணன் மகள் அஞ்சலியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கியில் (IDFC bank) இருந்து பேசுவதாகவும், கண்ணன் என்பவர் சாட்சியமாக உங்களது செல்போன் எண்ணை கொடுத்திருப்பதாக தெரிவித்ததுடன் கண்ணன் மாதத் தவணையில் செல்போன் வாங்கிவிட்டு அசலும், வட்டியும் கட்டவில்லை ஆகையால் பணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும் என அஞ்சலியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி மற்றும் அவரது கணவர் பிரபாகரன் தங்கள் தரப்பு நிலைமையை எடுத்து கூறியுள்ளார். அதில் 2018-ம் ஆண்டு முதல் தனது தாய், தந்தையை பிரிந்து வாழ்வதாகவும், 2019-ம் ஆண்டு திருமணமாகி கணவருடன் வசித்து வருவதாகவும், எனவே தனது தந்தை வாங்கிய செல்போன் தொடர்பாக எந்த தகவலும் தனக்கு தெரியாது எனவும், குறிப்பாக தனது தந்தை, தாய் இரண்டு பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அஞ்சலி கூறியதை சிறிதும் கேட்காமல் தொடர்ந்து தனியார் வங்கியிலிருந்து போன் செய்து பணத்தைக் செலுத்துமாறு சிலர் வற்புறுத்தி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அஞ்சலி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்ததையடுத்து, சில நாட்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமமூர்த்தி என்று ஒரு நபர் போன் செய்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இவரை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி பேசுவதாக கூறி ஒரு நபர் சட்ட நடவடிக்கை வேண்டாம், சமரசமாக செல்லுங்கள் என்று கூறியதுடன் வழக்கறிஞரை தொடர்பு கொள்ளுமாளும் , பணத்தை செலுத்தி இந்த பிரச்சினையை முடிக்க வேண்டும் என அஞ்சலியிடம் கூறியுள்ளார். இந்த உரையாடல்கள் அனைத்தையும் சின்னத்திரை நடிகை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

மேலும் இதனால் பதட்டம் அடைந்த அஞ்சலி மற்றும் அவரது கணவர் பிரபாகரன் இருவரும் தங்களது வழக்கறிஞரை நாடினர்.. அவரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் யாரோ தங்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டு மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகமடைந்து இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்..

புகார் தொடர்பாக விசாரிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி வைத்த போலீசார் இதுவரை புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அஞ்சலி என குற்றம் சாட்டியுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் செல்போனில் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதுபோன்று தனியார் வங்கி செயல்படுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தங்களது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பதிவிட்ட வீடியோ குறித்து பொதுமக்கள் சிலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் இதே போன்று பல்வேறு தனியார் வங்கிகளின் கலெக்சன் ஏஜென்ட்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் நேரடி மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in